Monday, August 16, 2010

நம்பிக்கை!!!!!!!!!!!

எப்போதும் ஒரு கதை இடம் பெறு வது வழக்கம். இந்தமுறை இரண்டு கதைகள்...
ஐந்தே வயதாகும் ரேகா, தன்னுடைய பாட்டியின் கிராமத்து வீட்டுக்குப் போயிருந்தாள். இரவு நேரத்தில் அவள் பாட்டி கதை சொல்லிக் கொண்டிருந்த போது, திடீரென பலத்த காற்று வீசியது. இடி முழக்கத்துடன் மின்னல் வெட்டியது. பெரும் மழை பிடித்துக் கொண்ட சற்று நேரத்தில் மின்தடை ஏற்பட்டு, எங்கும் இருள் கவ்வியது.
பாட்டி, ரொம்ப இருட்டா இருக்கு. எனக்கு பயமா இருக்கு!" என்றாள் ரேகா.
பாட்டி உடனே ஜன்னல் கதவுகளைத் திறந்து விட்டு, ஆகாயத்தில் ஒளிர்ந்த நிலவைக் காட்டினார்.
இதோ... என்றுமே அணையாத இறைவனின் விளக்கு! இந்த நிலா இருக்கும்போது, யாரும் எதற்காகவும் பயப்படத் தேவையில்லை!" என்றார் பாட்டி.
சந்திரன், கடவுளின் சொந்த விளக்கா?"
ஆமாண்டா செல்லம்! கடவுளுடையதுதான்!"
அவர் இதை அணைச்சுட்டுத் தூங்கப் போயிட்டாருன்னா?"
இல்லடா குட்டி! கடவுள் ஒரு போதும் தூங்க மாட்டார்!"
அப்பாடா! சாமி விழிச்சுக்கிட்டிருக்கும்வரை, எனக்கு பயமில்லை. குட்நைட் பாட்டி!" என்றபடி, படுக்கையில் சாய்ந்து தூங்கிவிட்டாள் ரேகா.

ஹிட்லரின் கடுங்கோபத்துக்கு ஆளான பத்திரிகையாளர் ஒருவர், இருட்டுப்பொந்தில் அடைக்கப்பட்டார். பல நாட்கள் தனிமையிலும், விரக்தியிலும் வாடினார். அவரைப் பார்க்க அவரது குடும்பத்தினரோ, நண்பர்களோ யாரும் வரவேயில்லை. மனம் நொந்து போயிருந்த அவர், ஒரு கரித்துண்டை எடுத்து யாரும் கவனிப்பதில்லை!" என்று சுவரில் எழுதினார்.
அந்த மண் சுவரின் வெடிப்பின் வழியே, மெல்லிய வெளிச்சம் வந்தது. மறுநாள் ஈரமான வேர் ஒன்று மெள்ள தலை நீட்டியது. இரண்டொரு நாளில் சிறிதாக இலைகள் முளைத்தன. தனக்குத் தரப்பட்ட குவளை நீரின், கொஞ்சத்தை அதன் மீது ஊற்றியதில், ஒரு கொடி படர்ந்தது. அடுத்த வாரம், வெள்ளை நிற சிறு பூ ஒன்று அழகாய் மலர்ந்து மணம் வீசியபோது, அந்தக் கைதி, முன்பு தான் எழுதிய வார்த்தைகளை அழித்து விட்டு, கடவுள் கவனிக்கிறார்!’ என்று எழுதினார்.

கடவுள் இருக்கிறார்... கடவுள் கவனிக்கிறார்... அதனால் நல்லவர்களுக்கு பயமில்லை. நல்லதையே நினைப்பவருக்குத் துயரமில்லை. நல்லவற்றையே நாடும் யாரும் மனம் தளர வேண் டாம்" என்று சொல்லிச் சொல்லி குழந்தைகளை வளருங்கள்.
அமைதி, ஆற்றல், மகிழ்ச்சி ஆகியவை நம் அனைவருக்குள்ளேயே இருக்கின்றன. நாம் விரும் பினால் பயற்சியின் மூலம் இந்த எல்லைக்குள் நுழைந்து இறைவனுடன் தொடர்பு கொள்ள முடியும். அதற்கு பண்டிகைகள், விழாக் காலங்கள், தெய்வ வழிபாடுகள் எல்லாம் பெரிதும் உதவுகின்றன.
‘நாம் இறைவனின் மடியில் இருக்கிறோம். மிகவும் பாதுகாப்பாக’ என்ற நம்பிக்கை உணர்வு நமக்கு இருக்கும்வரை, பயமில்லை... ஜெயம் மட்டுமே!

நன்றி : அனுஷா நடராஜன், மங்கையர்மலர்

1 comment:

  1. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

    ReplyDelete